கள்ளக்காதலியின் மகனை சுவற்றில் அடித்து கொன்ற வாலிபர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

799

திருவண்ணாமலை…..

கடலூர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மனைவி நர்மதா (26). இவர்களுக்கு நித்தீஷ்( 6), சித்தார்த்(4) என இரு மகன்கள் உள்ளனர். நர்மதாவின் கணவர் சசிகுமார் 4 வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

இந்நிலையில் பண்ருட்டியை சேர்ந்த தனியார் வங்கியில் நிதி வசூல் செய்யும் வினோத்குமார் (30) என்பவருடன் நர்மதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நர்மதா ஒரு ஷு கம்பெனியில் வேலை கிடைத்ததால் குடும்பத்துடன் ஆக்கூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வினோத்குமார் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

நர்மதா நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிலையில் அவரது மகன்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய போது 2-வது மகன் சித்தார்த் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தான்.

இதனை கண்டு நர்மதா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சிறுவனை மீட்டு மாமண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சித்தார்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நர்மதா தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வினோத்குமார் சிறுவன் சித்தார்த்தின் இரண்டு கால்களையும் பிடித்து சுவற்றில் சுழற்றி அடித்து கொலை செய்தது தெரியவந்தது. குடிபோதையில் வீட்டிற்கு வந்த போது சிறுவனை அடித்துக் கொன்று விட்டதாக வினோத்குமார் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.