பெண் வைத்தியர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் : கணவர், மாமியாருக்கு நடந்த பரிதாபம்!!

471

சென்னை….

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டர் மரியானோ ஆண்டோ புருனோவுக்கும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை டாக்டர் அமலி விக்டோரியாவுக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அயனாவரம் பகுதியில் வசித்து வந்த இவர்களுக்கு, ஒன்றரை ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மாமனார், மாமியார், கணவர் ஆகியோர் அமலியை துன்புறுத்தியுள்ளனர்.

2007ம் ஆண்டு ஆண் குழந்தை பெற்றெடுத்த அமலி, பிரசவத்துக்குப் பின் கணவர் வீடு திரும்பியபோது, அவரை வீட்டு வேலைகளை செய்ய வற்புறுத்தியதுடன், அவரது பெயரில் உள்ள சொத்துகளை எழுதி வைக்க சொல்லியும் துன்புறுத்தி தாக்கி, சித்ரவதை செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அமலி, கடந்த 2014 நவம்பர் 5ம் தேதி குளியலறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, மரியானோ ஆன்டோ புருனோ, அவரது தாய் அல்போன்சாள், தந்தை ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் அயனாவரம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, மருத்துவர் அமலியின் கணவர் மற்றும் மாமியார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும் இருவருக்கும் தலா ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தந்தை விடுதலை செய்யப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மரியானோ ஆன்டோ புருனோ, அவரது தாய் அல்போன்சாள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘அமலி மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஏற்கெனவே இருமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘குழந்தை இல்லை என்பதற்காக வீட்டில் பூஜைகளை நடத்தி, அமலியை கோமியம் குடிக்க வற்புறுத்தியுள்ளதாகவும், அனைத்து ஆதாரங்களையும் போலீசார் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளனர்’ என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘ஆதாரங்களில் இருந்து டாக்டர் தற்கொலைக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்று கருதுவதால் அவரது தற்கொலைக்கு காரணமான மனுதாரர்களுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்கிறேன்’ எனக் கூறி, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும், மேல்முறையீட்டு காலத்தில் அவர்கள் பிணையில் இருப்பதால் மீதமுள்ள தண்டனையை அனுபவிக்கும் வகையில் இருவரையும் மீண்டும் சிறையில் அடைக்க காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.