தஞ்சாவூர்…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் தம்பிக்கோட்டை அடுத்த கீழக்காடு பகுதியை சேர்ந்த இந்துமதி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்துமதி வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சென்றதாக தெரிகிறது.
ஆனால், இதை சகித்து கொண்ட கணவர், பிள்ளைகளுக்காக நீதிமன்றம் மூலம் மனைவியை மீட்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
எனினும் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் விரக்தியடைந்த இந்துமதி நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த ஆய்மழை பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு குடிபோதையில் சென்ற கணவர் செல்லத்துரை குடும்பம் நடத்த வருமாறு அழைத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவருடன் வர இந்துமதி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த செல்லதுரை, மனைவி என்றும் பாராமல் தலையில் அம்மிக்கல்லை போட்டு தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த இந்துமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், செல்லத்துரையை கைது செய்து கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.