ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி?

621

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி காணாமல்போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப் தொட்டப்பிள்ளி(வயது 42), இவரது மனைவி சவுமியா(வயது 38), மகன் சித்தாந்த்(வயது 12), மகள் சாச்சி(வயது 9).

கலிபோர்னியாவில் உள்ள யூனியன் வங்கியில் பணியாற்றி வரும் சந்தீப், Valencia- வில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை குடும்பத்துடன் காரில் Portland-லிருந்து San Jose-க்கு சென்று கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளனர்.

உறவினர்களுக்கு சந்தேகம் வர சந்தீப் குறித்து பொலிசிடம் புகார் அளித்தனர்.கருஞ்சிவப்பு நிறம் கொண்ட ‘Honda Pilot’ காரில் அவர்கள் பயணித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொலிசார் விசாரணை நடத்தியதில், போர்ட்லான்ட் அருகேயுள்ள யுரேகா நகரில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேசிய பூங்கா அருகே அவர்களது கார் காணப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்தன.

இந்நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமை Eel ஆற்றின் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதை அப்பகுதி பொலிசார் உறுதிசெய்தனர்.

மேலும் ஆற்றின் வெள்ளத்தாலும், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினாலும் காரை உடனடியாக மீட்க முடியாமல் போனதாகவும் பொலிசார் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கிடையே சந்தீப் குடும்பம் சென்றதாக கூறப்படும் காரும், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. காரின் தகவல்களும் ஒரே மாதிரி இருப்பதால் அவர்கள் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.