கணவனை மிரட்ட விஷம் குடிப்பதாக விளையாடிய கர்ப்பிணி பெண் : பின் நேர்ந்த துயரம்!!

404

கேரளா….

கேரளா மாநிலம் கோட்டயம் அடுத்த சிங்கவனம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் ஸ்ரீலஷ்மி (27). இவருக்கும் அவினாஷ் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்கு பிறகு அவினாஷ் வேலை கிடைத்து துபாய்க்கு சென்றுவிட்டார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லீவ் கிடைத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இதனையடுத்து ஸ்ரீலக்ஷ்மி கர்ப்பமடைந்தார். மாசமாக இருக்கும் மனைவியை பார்த்துக்கொள்வதற்காக அடுத்த மூன்று மாதம் துபாய்க்கு செல்வதில்லை என அவினாஷ் தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்ரீலக்ஷ்மி தேவையின்றி விடுப்பு எடுக்காமல் துபாய்க்கு திரும்புங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 28ம் தேதி அவினாஷை சம்மதிக்க வைப்பதற்காக வாயில் விஷத்தை ஊற்றிக்கொண்ட ஸ்ரீலக்ஷ்மி, துபாய்க்கு மீண்டும் செல்லவில்லை என்றால் இந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொள்வேன் என கூறி விளையாட்டாக பயமுறுத்தியுள்ளார்.

இதனால் ஆடிப்போன அவினாஷ் வேலைக்கு திரும்பி செல்வதாக உறுதியளித்துள்ளார். இதனிடையே வாயில் விஷத்தை ஊற்றியதை சில நொடி கவனிக்காமல் விட்ட ஸ்ரீலக்ஷ்மி அதை தெரியாமல் குடித்துவிட்டார்.

இதனால் அவரது உடல்நிலை மோசமாகி அன்றைய தினமே கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிப்ரவரி 7 அன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிங்கவனம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. உயிரிழந்த ஸ்ரீலக்ஷ்மி கடந்த ஜனவரி 24 ஆம் தேதிதான் தங்களது முதல் திருமணநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.