கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்த மனைவி : நடந்த பயங்கரம்!!

316

சேலம்…..

சேலம் தாதகாப்பட்டி கேட் அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் ஜீவா. தச்சு தொழிலாளி. இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜீவாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், அவர் கடந்த 16-ந் தேதி அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். அதன் பிறகு இரவில் வீட்டில் ஜீவா மர்மமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து கவிதா அளித்த தகவலின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.

அப்போது கவிதா, மதுபோதையில் இருந்த ஜீவா, கீழே தவறி விழுந்து இறந்ததாக போலீசில் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ஜீவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மது போதையில் தவறி விழுந்து இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே ஜீவாவின் பிரேத பரிசோதனை குறித்த அறிக்கை அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டது.

அதில் ஜீவாவின் முகம், வாய், கழுத்து பகுதியில் காயங்கள் உள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சந்திரகலா இதனை சந்தேக மரண வழக்காக மாற்றி விசாரித்தார். அப்போது போலீசாருக்கு கவிதா மற்றும் ஜீவாவின் நண்பரான ராஜா (39) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து, கவிதா, ராஜா ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஜீவாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

மேலும் கொலை செய்ததற்கான காரணம் குறித்து அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், ராஜாவின் சொந்த ஊர் கொண்டலாம்பட்டியை அடுத்த பூலாவரி ஆகும்.

சரக்கு ஆட்டோ டிரைவரான இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஆண்டு ஜீவாவின் அக்காள் கணவர் பூலாவரியில் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்வுக்கு சென்றபோது, ஜீவாவுக்கும்,ராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து ராஜா அடிக்கடி ஜீவா வீட்டுக்கு சென்று வந்தார். அங்கு ராஜாவுக்கு, கவிதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தங்களது செல்போன் எண்ணை பரிமாறி அடிக்கடி பேசி வந்தனர்.

இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஜீவா வீட்டில் இல்லாதபோது கவிதா, ராஜா உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் ராஜா தனது கள்ளக்காதலை வளர்ப்பதற்காக சேலம் தாதகாப்பட்டி சண்முக நகரில் வீடு வாடகைக்கு எடுத்து, அங்கு தனியாக வசித்து வந்தார்.

அந்த வீட்டில் அவர்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ராஜா, தனது கள்ளக்காதலி கவிதா மற்றும் அவருடைய குழந்தைகளுடன் போட்டோ எடுத்து அதனை வாடகை வீட்டில் மாட்டி வைத்திருந்தார். இதனிடையே இவர்களின் கள்ளக்காதல் குறித்து அறிந்த ராஜாவின் மனைவி, அவரை பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனிடையே கள்ளக்காதல் விவகாரம் ஜீவாவுக்கு தெரியவந்தது. அவர் கவிதா, ராஜாவை கண்டித்தார். இதனால் ஜீவாவை தீர்த்துக்கட்ட அவர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் தான் கடந்த 16-ந் தேதி இரவு வீட்டுக்கு அளவுக்கதிகமான மதுபோதையில் ஜீவா வந்தார்.

அப்போது அங்கு கவிதாவும், ராஜாவும் உல்லாசமாக இருந்தனர். இதைப்பார்த்த ஜீவா, அவர்கள் 2 பேரையும் சத்தம்போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜீவாவின் வாய், மூக்கை துணியால் அமுக்கினர். மேலும் மற்றொரு துணியால் அவருடைய கழுத்தை நெரித்தனர்.

இதில் மூச்சுத்திணறி ஜீவா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். உறவினர்கள், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வராமல் இருக்க அவர் தவறி விழுந்து இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து கவிதா, ராஜாவை போலீசார் கைது செய்தனர்.