“காரை அவரே ஓட்டிட்டு வருவாருன்னு எதிர்பார்க்கல”… ஊபர் டாக்சிக்காக காத்திருந்த இளம்பெண் குஷியில் போட்ட பதிவு!!

200

ஊபர்…

ஆபிஸ் போக வேண்டிய அவசரம். ஊபர் புக் செய்துவிட்டு நீங்கள் காத்திருக்கும் போது, அந்த நிறுவனத்தின் சிஇஓ காரை ஒட்டிக்கொண்டு வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? பொய் எல்லாம் இல்லை. உண்மையாகவே இந்தியாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.

வாடிக்கையாளரின் அவசர பயணத்துக்கு உதவ, ஊபர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரப்ஜீத் சிங் டிரைவராக செயல்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

பிரபல சமூக வலைத் தளமான LinkedIn-ல் தனது வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து இருக்கிறார் அனன்யா திவேதி என்னும் இளம்பெண். தன்னுடைய அலுவலக வேலை காரணமாக ஊபர் புக் செய்து இருந்த அனன்யா, அதற்காக காத்திருந்து இருக்கிறார்.

அப்போது, ஊபர் இந்தியாவின் CEO பிரப்ஜீத் சிங் டாக்சியை ஓட்டி வந்திருக்கிறார். தன்னை சிங் அறிமுகப்படுத்திக்கொண்டாலும் அனன்யாவிற்கு சந்தேகமாகவே இருந்திருக்கிறது. கூகுளில் தேடிய பின்னரே, ஊபர் இந்தியாவின் CEO அவர் தான் எனத் தெரியவந்து இருக்கிறது.

இது குறித்து அனன்யா தனது பதிவில்,” வெகுநாட்கள் கழித்து வேலைக்காக வெளியே வந்தேன். அப்போது ஊபர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பிரப்ஜீத் சிங் காரை ஒட்டிக்கொண்டு வந்தார். ஆரம்பத்தில் இதனை நான் நம்பவில்லை. பின்னர் கூகுளில் அவரைப் பற்றி தேடிய போதே உண்மை விளங்கியது.

அவரது முதன்மை கள ஆய்வின் ஒரு பகுதியாக இதை அவர் செய்து வருகிறார். பிரச்சினைகளின் வேர்களை கண்டறிய இப்படி பணியாற்ற உண்மையான பணிவும் மன உறுதியும் தேவை. அவருக்கு வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது வாடிக்கையாளர்களுக்கு பிரப்ஜீத் சிங் இப்படி ஆச்சர்யம் அளிப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே மதுவந்தி என்ற பெண் ஒருவரும் இதே போன்ற சம்பவம் தன் வாழ்விலும் நடைபெற்று உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து மதுவந்தி எழுதியிருக்கும் பதிவில்,” நான் வெளியே செல்வதற்காக ஊபர் புக் செய்து இருந்தேன். என்னுடைய ஊபர் டிரைவர் அழைத்து உடனே வருவதாக குறிப்பிட்டார். நான் எங்கே செல்கிறேன்? என்பதைக்கூட அவர் கேட்கவில்லை. நான் ஆச்சர்யத்தில் இருந்தேன்.

அப்போது கார் எனது எதிரே வந்து நின்றது. அவர் கீழே இறங்கி,”ஹாய் மதுவந்தி நான் பிரப்ஜீத் சிங் ஊபர் நிறுவனத்தின் இந்திய CEO. என்னுடைய முதல் சவாரி நீங்கள். பயணத்தை தொடரலாமா?” எனக் கேட்டார்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார். ஊபர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியே வாடிக்கையாளரை பிக்கப் செய்ய காரை ஓட்டிச்சென்ற சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகிறது.