குழந்தை பாக்கியம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

636

திருச்சி…

திருச்சியில் குழந்தை பாக்கியம் இல்லாததால் மன உளைச்சலில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மண்ணச்சநல்லூர் அருகே 31 வயதான பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை: தற்கொலை குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் அருகே குமரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தமுத்து. இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 11 ஆண்டுளுக்கு முன்பு இவருக்கும் சமயபுரம் அருகே மாடக்குடி கிராமத்தைச் சேர்ந்த பேபி ஷாலினிக்கும் திருமணம் நடைபெற்றது.

11 ஆண்டுகளாக இந்த தம்பதி குழந்தை பேறு இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளனர். குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் பேபி ஷாலினி அடிக்கடி வருத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காத்தமுத்து வெளியில் சென்ற நேரம் பார்த்து பேபி ஷாலினி வீட்டு மாடிக்கு சென்று உடலில் மண்ணெண்னை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்து விட்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தற்கொலை செய்துகொண்டது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மண்ணச்சநல்லூர் போலீசார், குழந்தை பாக்கியம் இல்லாததால் பேபி ஷாலினி தற்கொலை செய்துகொண்டாரா? ஏதேனும் சதி உள்ளதா என்ற கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து கீழ்கண்ட தற்கொலை தடுப்பு அமைப்புகளின் ஹெல்ப்லைன் எண்களை தொடர்புகொள்ளலாம்.