நடிகை சாவித்திரியை மதுவுக்கு அடிமையாக்கியவர் ஜெமினி கணேசனா?

820

தற்போது வெளியாகியுள்ள ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் நடிகை சாவித்திரியை மதுவுக்கு அடிமையாக்கியவர் ஜெமினி கணேசன் என்பது போன்ற காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்துள்ளனர்.

சாவித்திரிக்கு அதிக பட வாய்ப்புகள் குவிந்ததால் ஜெமினி கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சாவித்திரியை மது குடிக்கும்படி தூண்டி அவரை ஜெமினி கணேசன் குடிக்கு அடிமையாக்குவது போன்ற காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படத்தை பார்த்த சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி வெகுவாக பாராட்டியுள்ளார். ஆனால், ஜெமினி கணேசனின் முதல் மனைவி குடும்பத்தினர் ஜெமினி கணேசனை மோசமாக சித்தரித்துள்ளதாகக் கூறி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ் கூறுகையில், ‘சாவித்திரிக்கு அப்பா தான் மது குடிக்க கற்றுக் கொடுத்தார் என்று படத்தில் காட்சி வைத்து இருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டேன்.அவரால் எந்த பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தன்னை விரும்பிய பெண்களைத்தான் திருமணம் செய்து கொண்டார்’ என தெரிவித்துள்ளார்.