‘புஷ்பா’ படம் பார்த்து கொலை செய்த 3 சிறுவர்கள்… காரணத்தைக் கேட்டு ஆடிப்போன போலிஸார்!!

513

டெல்லி….

புஷ்பா’ திரைப்படம் பார்த்த சிறுவர்கள், அதில் வரும் நாயகனைப் போல பிரபலமாக நினைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘புஷ்பா’. கேங்ஸ்டர்களை மையமாக கொண்டு உருவான இந்த தெலுங்குப் படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இப்படத்திதில் வரும் அல்லு அர்ஜூனின் வசனங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தன. இந்நிலையில் அந்தப் படத்தைப் பார்த்து உத்வேகமடைந்த சிறுவர்கள் 3 பேர் கொலை செய்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியில் கடை ஒன்றில் வேலை பார்த்துவந்த சிபு என்ற 24 வயது இளைஞரிடம் 3 சிறுவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அந்த சிறுவர்கள், தங்களது செல்ஃபோனில் வீடியோவும் எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் ‘புஷ்பா’ போல பிரபலம் அடையலாம் என்றும் எண்ணியுள்ளனர்.

சிறுவர்களால் கத்தியால் குத்தப்பட்டு வயிற்றில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை உயிரிழந்தார். இளைஞர் உயிரிழந்தது குறித்து மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சிறுவர்கள் இளைஞருடன் வாக்குவாதம் நடத்தி கொலை செய்தது கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில், சிறுவர்களைப் பிடித்த போலிஸார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘புஷ்பா’ படம் போன்று பிரபலமடைவதற்காக இவ்வாறு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் பேசும் ‘நான் யாருக்கும் அடங்காதவன்டா’ என்ற வசனத்தையும் அந்தச் சிறுவர்கள் பேசியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, போலிஸார், சிறுவர்களை கைதுசெய்து அவர்களிடமிருந்து செல்ஃபோன் மற்றும் கத்தியை பறிமுதல் செய்துள்ளனர்.

சினிமாவை பார்த்து சிறுவர்கள் கொலை சம்பத்தில் ஈடுபட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.