விண்ணிலிருந்து விழுந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள் எங்கு விழுந்தன தெரியுமா??

1738

விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றிய சீன விண்வெளி நிலையத்தின் பாகங்கள் தென் பசிபிக் கடல் பகுதியில் இன்று விழுந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு சீனா ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப்போய்விட்டதாக சீனா கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்தது.

அதன்பின்னர் விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றி வந்துகொண்டிருந்த இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி வரத் தொடங்கிய நிலையில் விண்வெளி நிலையத்தின் சில பாகங்கள் இன்று திங்கட்கிழமை பூமியில் வந்து விழும் என விஞ்ஞானிகள் கணித்திருந்தனர்.

இந்நிலையில் பூமியின் வளிமண்டல பகுதிக்குள் இன்று நுழைந்த விண்வெளி நிலையம், அதிவேகமாக பூமியை நோக்கி பாய்ந்து வந்தபோது காற்றின் உராய்வினால் அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிட்டன.

மேலும் விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் தெற்கு பசிபிக் பகுதியில் விழுந்ததாக சீனாவின் விண்வெளி பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி 10.15 மணியளவில் ஒரு பேருந்து அளவிலான பாகம் பூமியில் விழுந்திருப்பதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவை பெரும்பாலும் விண்வெளி நிலையத்தின் என்ஜின் போன்ற கனமான பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பூமியில் விழுந்த பாகங்களை தேடும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான பாகங்கள் அழிந்துவிட்ட நிலையில், தெற்கு பசிபிக்கில் தண்ணீர் நிறைந்த பகுதியில் விண்வெளி ஆய்வுக்கூட பாகங்கள் விழுந்திருப்பதால் பூமிக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.