2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இளம் தாயார் : கைப்பட எழுதிய உருக்கமான கடிதம்!!

306

மயிலாடுதுறை…

தமிழகத்தில் எதிர்காலத்தை சந்திக்கும் தைரியம் இல்லை என கடிதம் எழுதிவிட்டு இளம்பெண்ணொருவர் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மேலநாங்கூர் கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் கார்த்திக் (27). மராட்டிய மாநிலம் புனேயில் லொறி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இவரும் பாரதி (21) என்ற பிஎஸ்சி பட்டதாரி பெண்ணும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது மகன் கவுசிக் (3), மகள் பவதாரணி (1). இவர்கள், கடந்த மூன்று மாதங்களாக சீர்காழி தென்பாதி என்எஸ்பி நகரில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். கார்த்திக் சென்னை, புனே உள்ளிட்ட இடங்களுக்கு டிரைவர் வேலைக்கு சென்று விடுவதால் பாரதி குழந்தைகளோடு தனியாக வசித்து வந்தார்.

கார்த்திக் அதிக அளவில் கடன் வாங்கி இருப்பதாகவும், இதனால் அவருக்கும், பாரதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக பாரதி கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பாரதி தனது தாய் சித்ராவுக்கு போன் செய்து தானும், குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.

இதனால் பதறிப்போன சித்ரா, பாரதியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகள் பாரதி தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் பேரக்குழந்தைகளை தேடிப்பார்த்தபோது வீட்டுக்குள் குழந்தைகள் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர். தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 சடலங்களையும் மீட்டனர்.

பாரதி தற்கொலைக்கு முன் எழுதியிருந்த கடிதத்தில், எங்க சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. எங்க அப்பா, அம்மாவை விட்டு வந்து ரொம்ப தப்பு பண்ணிட்டேன்.

என் புருஷனுக்கு கடன் வாங்கி, கடன் கொடுக்கத்தான் தெரியும். எங்களுக்கு இடம் வாங்கி வீடு கட்ட தெரியாது. எங்க எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரியல. அதனால எதையும் சந்திக்கும் தைரியம் இல்லை என எழுதியுள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.