கணவன் விட்டு சென்றதால் 8 மாத கர்ப்பிணி தவிப்பு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

202

கர்ப்பிணி பெண்..

கர்ப்பமாக்கிவிட்டு கழட்டிவிட்ட கணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி 8 மாத கர்ப்பிணி பெண் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக திடீரென அமர்ந்து தர்ணா போராட்டம் செய்ததால் பரபரப்பு.

ராமநாதபுரம்; காதலித்து கர்ப்பிணியாக்கிய பின்னர் திருமணம் செய்து தன்னை விட்டுச்சென்ற கணவனிடம் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி பெண் கண்ணீர்மல்க அளித்துள்ள பேட்டி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நித்யா. இவர் அதே பகுதியில் வசித்து வந்த குலசேகரக்கால் என்னும் ஊரைச் சேர்ந்த நவீன்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக நவீன்குமார் ஆசை வார்த்தை கூறியதால் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால் நித்யா கர்ப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில், நவீன்குமார் தனது தங்கை திருமணத்துக்குப்பின் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பின்னர் தங்கையின் திருமணத்தை அடுத்தும் காலம் தாழ்த்தியதால் ஊர் பெரியவர்களிடம் முறையிட்டு இருவருக்கும் கடந்த 5மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் திருமணமான மறுநாளிலிருந்து தன்னை விட்டுவிட்டு நவீன்குமார் சென்றுவிட்டதாகவும், தற்போது அவர் என்னை சந்திக்க வராமல் தலைமறைவாகி விட்டதாகவும், இதுகுறித்து அவரின் வீட்டில் சென்று விசாரித்த நிலையில், அவர்கள் சரியான பதில் கூறாததால்,

இதுகுறித்து தேவிபட்டினம் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லாததால், இன்று ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக நித்யா தன்னுடைய உறவினர்கள் உடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை அடுத்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு அவர்கள் மனு அளிக்கச் சென்றனர். பிறகு காவல்துறையினர் அவரை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் நித்யாவை நவீன்குமாருடன் சேர்த்து வைக்கக்கோரி பெண்ணின் தாய் கண்ணீர்மல்க பேட்டி அளித்த நிகழ்வு அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.