கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் சிக்கிய உருக்கமான கடிதம்!!

273

தென்காசி…

தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் இந்து பிரியா (18). இவரது தந்தை தந்தை கணேசன் இறந்துவிட்ட நிலையில் தாய் மாடத்தியுடன் வசித்து வந்தார். கடந்தாண்டு பள்ளி படிப்பை முடித்த மாணவி இந்து பிரியா புளியங்குடி டி.என்.புதுக்குடியில் உள்ள மனோண்மணியம் சுந்தரனார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மகளை எழுப்பி கல்லூரிக்கு கிளம்ப சொல்வதற்காக அவரது அறைக்கு தாய் மாடத்தி சென்றுள்ளார். அங்கு இந்துபிரியா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதனை கண்ட தாய் மாடத்தி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இந்துபிரியா உடலை கீழே இறக்கினர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த புளியங்குடி போலீசார் மாணவியின் உடலை புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மாணவியின் உருக்கமான கடிதம் சிக்கியது.

போலீசார் விசாரணையில், மாணவி இந்து பிரியா மூன்று நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை அழைத்த பேராசிரியர் ஒருவர், கல்லூரிக்கு அனுமதியின்றி எதற்காக செல்போன் எடுத்து வந்தாய் என கூறி மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடு என கேட்டுள்ளார்.

ஆனால், மாணவி இந்து பிரியாவோ, நான் செல்போன் எடுத்து செல்லவில்லை எனவும் சக மாணவிதான் எடுத்து வந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எந்த தவறும் செய்யாத தன்னிடம் பேராசிரியர்கள் வளர்மதி, முத்துமணி ஆகியோர் மாணவியை திட்டி மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவி இந்து பிரியா இரண்டு பக்கத்தில் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ” நான் செய்யாத தவறுக்கு என்னிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி விட்டனர். எனவே நான் தற்கொலை செய்கிறேன்.

எனது சாவுக்கு ஒரு பேராசிரியரும், ஒரு பேராசிரியையும் தான் காரணம் என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும், கடிதத்தின் கடைசி குறிப்பில், ” நான் யாரையும் காதலிக்கவில்லை, லவ் பண்ணி அவங்க விட்டுபோனாங்கன்னு சாகல.. லவ் பண்ணவே இல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி கல்லூரியில் விசாரணை நடத்தி வந்த நிலையில், பேராசிரியர்கள் வளர்மதி, முத்துமணி ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.