காதலித்து திருமணம் செய்து 5 வருடம் வாழ்ந்த பின்பு சாதியை காரணம் காட்டி கொடுமை : பெண்ணின் கண்ணீர் போராட்டம்!!

326

திருப்பத்தூர்….

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடும்பம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (35). காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகள் வளர்மதி (35). இருவரும் 2007ஆம் ஆண்டு ராணிப்பேட்டையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் டிடிஎட் படிக்கும்போது காதலித்துள்ளனர்.

அதே ஆண்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் திருப்பதிக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் ஆசிரியர் பயிற்சியை கைவிட்டு திருப்பதி மருத்துவம் படிக்க சென்றுள்ளார். அச்சமயத்திலும் 2017 ஆம் ஆண்டு வரை சுமார் பத்து வருடங்களாக காதலை தொடர்ந்துள்ளனர்.

பின்பு வளர்மதியின் வற்புறுத்தலின் பெயரில் பெற்றோர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது வரை சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவம் முடித்து மருத்துவராகவும், கொடுமாம் பள்ளி பகுதி அதிமுக சார்பாக ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் உயர்ந்த திருப்பதி, திடீரென வளர்மதியின் சாதி அடையாளத்தை முன்னிறுத்தி எப்படியாகிலும் வளர்மதியை கைவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் தன்னுடைய நண்பனை விட்டு பாலியல் சீண்டல் செய்வது மட்டும் அல்லாமல் அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளதாக தெரிகிறது.

இது சம்பந்தமாக திருப்பத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு தொடர்ந்த பின்பு அதையே காரணம் காட்டி திருப்பதி வளர்மதியுடன் வாழ விரும்பவில்லை என்று கூறி அவரை வீட்டை விட்டு துரத்தி உள்ளார்.

கடந்த ஆறு மாத காலமாக தன்னுடைய அம்மா வீட்டில் இருந்த வளர்மதி இன்று திருப்பத்தூர் அருகே மடப்பள்ளியில் உள்ள திருப்பதிக்கு சொந்தமான சந்திரலிங்கம் மருத்துவமனை முன்பு அமர்ந்து முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.