கடந்த 19-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஜூனியர் பெண்களுக்காக 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடும் போட்டி இன்று நடைபெற்றது.
அதில் பங்குபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த தொடரில் அவர் வெல்லும் இரண்டாவது தங்கம் இதுவாகும். ஷ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா மற்றும் இளவேனில் வளரிவான் ஆகியோர் பங்குபெற்ற குழு பிரிவில் அவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளில் 631.4 புள்ளிகள் எடுத்து அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனை என்ற சாதனையை இளவேனில் வளரிவான் படைத்து அசத்தியுள்ளார்.