நீர்த்தேக்கத்தில் விழுந்த சிறுவன்: கொழும்பிலிருந்து செல்லும் சுழியோடிகள்!!

703

மஸ்கெலியா – ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் காணப்படும் நீர்த்தேகத்தில் தவறி விழுந்த சிறுவனை மீட்க கொழும்பிலிருந்து சுழியோடிகள் இன்று செல்லவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹப்புகஸ்தென்ன பகுதியில் தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு விறகு தேடுவதற்காக கெனியன் நீர்த்தேக்க பகுதியில் உள்ள காட்டிற்கு நேற்று மாலை சென்றுள்ளார்.

இதன்போது தந்தையோடு குறித்த சிறுவன் சென்றுள்ளார். இந்த நிலையில் நீர் அருவி பகுதியிலுள்ள கற்பாறை ஒன்றில் ஏறும் பொழுது சிறுவன் தவறி நீர்த்தேக்கத்தில் விழுந்துள்ளார்.

இவரை காப்பாற்றுவதற்காக தந்தையும் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார். இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் தந்தையின் கூச்சலை கேட்டு அப்பகுதியிலிருந்த மூவர் தந்தையை காப்பாற்றியுள்ளனர்.

இருந்தும் நீர்த்தேக்கத்தில் விழுந்த மகன் இதுவரையில் மீட்கப்படவில்லை. இதனால் அவரை மீட்பதற்காக கொழும்பிலிருந்து இன்று சுழியோடிகள் வருவதாக சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் சீட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஜயகுமார் கலைராமன் எனும் 14 வயது சிறுவனே நீர்த்தேக்கத்தில் விழுந்துள்ளார்.